இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஈழத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
உள்நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வெளியார் தலையிடக்கூடாது என்று தெரிவிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசகராக செயற்படும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகைக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கையை எடுக்கப்போகின்றார் என்றும் அமைச்சர் ரணவக்க கேள்வியெழுப்பினார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பதற்காக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளியார் தலையிடக்கூடாது என்றும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது
உள்நாட்டுப் பி்ரச்சினையில் வெளியாரின் தலையீடு இருக்கக்கூடாது என்று ஆயர் பேரவை தெரிவித்துள்ளது. அவ்வாறு தெரிவிப்பதற்கு முன்னர் இந்த உள்நாட்டு விவகாரத்தை சர்வதேச மயப்படுத்திவரும் ஆயர் பேரவையில் அங்கம் வகிக்கும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகைக்கு எதிராக கர்தினால் தலைமையிலான ஆயர் பேரவை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று வினவுகின்றோம்.
யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் ஒருவர் இவ்வாறு தெரிவிக்கும்போது சர்வதேசம் அதனை தவறாக புரிந்துகொள்ளும். எனவே உள்நாட்டுப் பிரச்சினையை மன்னார் மாவட்ட ஆயரே சர்வதேசமயப்படுத்தி வருகின்றார்.
அதுமட்டுமல்ல மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டுவருகின்றார். இது தொடர்பில் ஆயர் பேரவையின் நிலைப்பாடு என்ன என்பதனை உடனடியாக அறிவிக்கவேண்டியது அவசியமாகும்.
மல்கம் ரஞ்சித் ஆண்டகை முதலில் தனது வீட்டில் உள்ள பிரச்சினையை தீர்க்கவேண்டும். அதன் பின்னர் நாடு குறித்து அவர் பேசலாம்.
இதேவேளை இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஈழத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமது தாயகப் பிரதேசம் என்றும் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான கொள்கையையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. உண்மையில் பார்க்கப்போனால் கூட்டமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றார்.
ரமணன்
0 comments to "தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது -ஜாதிக ஹெல உறுமய"