Home » » இலங்கை அரசுக்கு காலம் வந்துவிட்டது : யசூஷி அகாஷி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக செயற்படுத்தி நாட்டின் நல்லிணக்கத்திற்காக சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை அரசாங்கதிற்கு காலம் வந்து விட்டதாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜப்பான்தூதுவரின் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை காலம் கடத்தாது விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அது வே நாட்டின் நீண்ட தூர இன ஐக்கியத்திற்கு சிறந்ததாக அமையும். இதனையே ஏனைய நாடுகளைப்போன்று ஜப்பான் அரசாங்கமும் எதிர்பார்க்கின்றது.

இதேவேளை, ஆணைக் குழுவின் பரிந்துரைகளை விரைவாக நிறைவேற்றி சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை செயற்பட வேண்டும்.  இலங்கை தொடர்பில் எதிர்வரும் மார்ச்மாதம் இடம்பெறவுள்ள ஐ. நா. மனித உரிமை கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை என்னவென்பது எனக்கு தெளிவாக தெரியாது.

வடக்கில் மாகாண சபை தேர்தல் எவ்வித பிரச்சிகைளும் இன்றி இடம்பெற்று மாகாண சபை ஆட்சி நடைபெறுவதை நான் வரவேற்கின்றேன்.  அத்துடன் வட மாகாண முதலமைச்சருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
 
இம்மு றை இலங்கைக்கான எனது விஜயம் காலம் குறுகியதென்பதால் நான் வடக்கிற்கு சென்று நிலைமைகளை ஆராயமுடியவில்லை. அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டறிந்து கொண்டேன். வடக்கு முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
இந்நிலையில், வட மாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு செயற்படும் என நம்புகின்றேன்.

மூதூரில் இடம்பெற்ற அரச சார்பற்ற தனியார் நிறுவனத்தின் 17 பணயாளர்கள் படுகொலை மற்றும் திருகோணமலை இடம்பெற்ற 5 மாணவர்கள் படுகொலை தொடர்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போன்று விசாரணைகள் இடம்பெற வேண்டும். அதனையே சர்வதேசமும் எதிர்பார்க்கின்றது. இவ் விடயத்தில் அரசாங்கம் தனது ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்கும் என நம்புகின்றேன்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயம் குறித்து நான் ஜெனீவாவில் அவருடன் கலந்தாலோசித்தேன். அவர் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை. அவர் தனது கடமையையே நிறைவேற்றியுள்ளார். 
 
சர்வதேச அமைப்புகள் இலங்கையின் மீள் கட்டுமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றல் போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் தனது செயற்பாட்டை காட்டியுள்ளது. காணி மற்றும் போரினால் இழப்புகளை சந்தித்த மக்கள் மத்தியில் மீள் இணக்க செயற்பாட்டினை கடடியெழுப்ப அரசு முன்வர வேண்டும்.
 
இதேவேளை அரசாங்கம் காலம் கடத்தாது மனிதாபிமான செயற்பாட்டுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக செயற்படுத்தி  சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட காலம் வந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
 
 

0 comments to "இலங்கை அரசுக்கு காலம் வந்துவிட்டது : யசூஷி அகாஷி"

Leave a comment

Powered by Blogger.