இலங்கை - இந்தியாவிற்கு இடையே 1987 இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இனங்களுக்கிடையிலான விரிசலுக்கு காரணமாக அமைந்தது என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விஜித பேருகொட எம்.பி. கேட்ட வாய்மொழி மூலமான விடைக்கான கேள்விக்கு பதிலளித்துப் பேசும் போதே வெளிவிவகார பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 1987 இல் ஆட்சியிலிருந்த அரசு ஒழுங்கான வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிக்காத நிலையிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்து இடம்பெற்றுள்ளது.
எனினும் ராஜீவ் காந்திக்கும் ஜே.ஆர். ஜயவர்த்தனவுக்கும் இடையே கைச்சாத்தான அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லுபடியாகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல இந்திய இராணுவம் இலங்கைக்குள் வருவதற்கும் வழிவகுத்தது. அத்துடன் இந்திய இராணுவத்தினர் அதிகளவில் கொல்லப்பட்டதும் இலங்கையிலேயே என அமைச்சர் பதிலளித்தார்.
மேலும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களைக்கூட இந்தியாவுக்கு கொடுப்பதற்குக் கூட இந்த ஒப்பந்தம் வழிகோலியது. இருப்பினும் எண்ணெய் குதங்களை கையளிப்புக்காக ஒப்பந்தம் கைச்சாத்திட்ட விதத்திலும் தவறு இருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் எல்லா இனங்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. என்றாலும் அந்த ஒப்பந்தம் இன்றும் செல்லுபடியாகும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா குறிப்பிட்டார்.




0 comments to "இனங்களுக்கான மோதலுக்கு இந்தியாவே காரணம், வெளிவிவகார அமைச்சர் "