நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் டானியல் றெக்சியன் (ரஜீவ்) படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். முன்னர் கைது செய்யப்பட்ட இளைஞரது வாக்குமூலத்தின் தொடர்ச்சியாகவே கமலேந்திரன் மற்றும் கொலை செய்யப்பட்ட றெக்சியனின் மனைவி ஆகியோர் நேற்று மாலை ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27 ம் திகதி புங்குடுதீவில் தனித்திருந்த நிலையில் நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் டானியல் றெக்சியன் (ரஜீவ்) சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதி மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
பலகோணங்களில் துருவித் துருவி முன்னெடுக்கப்பட விசாரணைகளின் மூலம், உயிரிழந்தவரின் மனைவியின் ஒத்துழைப்புடனேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கொலை நடந்த இடத்துக்கு கமலேந்திரனை ஜசிந்தன் என்பரே வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவானிடம் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
அங்கு விசாரணைகளின் பின்னர் இவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 9 எம்.எம். ரக பிஸ்டலும் 11 துப்பாக்கி ரவைகளும் சூடு நடத்திவிட்டுச் சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருள்களை பொலிஸார் நேற்று நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
அவற்றை பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். ஜசிந்தன் என்பவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்றும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் 2010 ஆம் ஆண்டு அவர் ஈ.பி.டி.பியில் இணைந்து கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

.jpg)


0 comments to "கொலைக்குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட கமலேந்திரனுக்கு 17ம் திகதி வரை விளக்கமறியல் "